World Tamil Blog Aggregator Thendral: ஒரு கோப்பை மனிதம்-அணிந்துரை

Thursday 23 October 2014

ஒரு கோப்பை மனிதம்-அணிந்துரை

 கனடாவில் இருந்து..

எனது கவிதை நூலுக்கு அணிந்துரை தந்தவர்வலைப்பூ நல்கிய தோழி இனியா.. இலங்கையில் பிறந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் இனியா விடம் அணிந்துரை  கேட்டவுடன் மிகவும் மகிழ்வுடன் தனது பல்வேறு சிரமங்களுக்கு நடுவில் எழுதி கொடுத்துள்ளார்.இவரின் அன்பிற்கு என்ன கைம்மாறு செய்வதென தெரியாமல் மனம் நேசத்தில் நிறைந்து வழிகின்றது...இவரது http://kaviyakavi.blogspot.com.என்ற வலைத்தளத்தில் அழகிய படங்களுடன் நூறு கவிதைகட்கு மேலும்,கட்டுரைகளும் தமிழின் மேன்மையைக்கூறுகின்றன...

தோழி இனியாவின் அணிந்துரையாக...


வணக்கம் தோழி!

கவிஞர் கீதா அவர்கள் கனவு பலிக்கும் வேளை இது. பண்பட்டுப் போன உள்ளம் அவருக்கு மகிழ்ச்சி, பரிதவிப்பு, ஆதங்கம், ஆக்ரோஷம், வேதனை என ரசித்து ருசித்து அறுசுவையுடன்  படைத்திருக்கிறார் இவ் விருந்தை நாம் அருந்த  என்றே எண்ணத் தோன்றுகிறது. அவர் வேண்டு கோளுக்கிணங்க அளவில்லா மகிழ்ச்சியுடன் அவர் வெளியிடவிருக்கும் நூலுக்கு அணிந்துரை தரவிளைகிறேன்.
அவருக்கு நிறைந்த வாழ்த்தும் வெற்றியும் கிட்ட வேண்டும் என வணங்கி வாழ்த்துகிறேன் ....!




கவிஞர் கீதாவின் சிந்தனை முத்துக்களாய் சிதறி தெறிக்கிறதே இப்படி இந்த இணையத்து வலைக்குள். இதயத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதுமா இல்லம் அதில்  தோய்ந்திடவேண்டாமா? அது போல் இணையத்தில் மட்டும்  இருந்தால் போதுமா இணையமற்றோர் இல்லங்களும் நுகரட்டுமே.
கீதா அவர்கள் சிதறிய முத்துக்களை சேர்த்தெடுத்து கோர்திடவோ காலத்திற்கும் அழியாமல் பெட்டகத்தில் (புத்தகத்தில்) வைத்து பூட்டிடவோ,  என  எண்ணினார் போலும் அருமையான அந்த சின்ன சின்ன மின்னல் போல் தோன்றிய எண்ணக் கருவுகளை எல்லாம் தொகுத்து வழங்க இருக்கிறார். அப்படி என்ன தான் இவருக்கு தோன்றிற்று என்று பார்ப்போமா.

கயிற்றில் ஆடும் சிறுமியின் பசியை எடுத்த படத்தில் காண்கிறார்  இவர் எவ்வளவு உற்று நோக்கியதை எத்துணை அழகோடு சர்வசாதரணமாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் கண்முன்னே அந்தக் காட்சியை. சின்ன வைரக்கல்லா இது. கல்லு  சிறிது ஒளி பெரிது அல்லவா அது போன்று. எவ்வளவு பெரிய விடயத்தை ஒரு நொடிக்குள் சொல்லிவிட்டாரே.
சின்னக் கொடி யொன்று சீராக வளருமென்று சீர் தூக்கி பார்க்கு முன்னர் செருப்பாய் எண்ணி மிதித்தீரே நடைப்பிணமோ நீவீர் என்கிறார் உணர்ச்சி மேலிட. வருத்தம் மேலிடும் வார்த்தையாடல்.

உலை வைத்தது கடன் உருகுகிறாள் உயிர்த் தோழி. அவள் உயிர் சுமந்த புன்சிரிப்பும் கனிமொழிப் பேச்சும் காய்ந்து கிடந்தது கல்லறையில் என்று கலங்கியது நெஞ்சம் என்கிறார் உள்ளத்து வலிசுமந்து இந்தக் கோதை.

கோடரிச் சொற்கள் கொண்டு பிளந்தனராம் உறவுகளை என்றும் குமுறுகிறார் இந்தக் கவிஞர் சிந்தனை சிற்பியார்.

தேம்பும் வகையில் சட்டென்று குழந்தையாகி பால்யதில் புதைந்து கொள்ளப் பார்க்கிறார். எவ்வளவு யதார்த்தம், அனைவரது உள்ளத்திலும் தோன்றித் தான் மறைந்திருக்கும் இவ்வெண்ணம் சுனாமியின் சுவடுகள் போல் மறத்தல் அவ்வளவு
எளிதில்லை என்கிறார். மனம் நொந்த படி.

தமிழே தகராறு என்கிறது நகரக்குழந்தை என்று வெந்து விட்டார் இந்த நங்கை வேகாமல்.

மகிழ்வான தருணங்களை மனதில் வைத்துக் கொண்டு மறக்கமுடியாத தருணங்களை நினைவுச் சின்னங்களாய் உதிர்க்கிறார். காதலில் அன்பும் பிரிதலும் அவிழ்தலும் நெய்தலுமாக.

களுக்கென்று சிரிக்கும்படியாக நகைசுவை ததும்ப கேட்கிறார் தேநீருக்கும் வெட்கமோ மேலாடை தரிக்கிறதே அவசரமாக என்கிறாரே பாருங்கள் யாருக்கு இப்படி தோன்றி இருக்கும் சொல்லுங்கள்.

புயல் வரும் என்றுணராமல் மலர்கள் தேன் சுமந்த மகிழ்வில் கர்வத்தைக் கண்டு வருத்துகிறார் போலும், அழகான இப்பூஞ்சோலை வாடாமல் பூத்திருக்க வழியில்லையோ என ஆதங்கப்படுகிறார்.
நிலவுப் பெண் வெட்கத்தால் சிவக்க எப்போதும் குழந்தைகள் தானா கருதிப்பார் கணவனையும் என்று கதிரவன் கேட்க நிலவுப் பெண்ணால் நிராகரிக்க முடியவில்லையோ என்னமோ கற்பனைக் கெட்டாத கவி இது தானோ.

சீச்.. சீ... என்று வெட்கம் கேட்டவர்கள் என்று திட்டிக்கொண்டு திரையிட்டது கண்ணடி பிம்பம் என்கிறாரே பாருங்கள் எப்படி இதுசாத்தியம் என்று வியக்கிறேன் நான்.

வலைவீசிப் பிடிக்க முடியவில்லையே இந்த விண் மீன்களை என்று வாட வேப்பம் பூ வோ அதை மோப்பம் பிடித்து காலடியில் விழுந்து கரைத்ததாம் கவலையை என்கிறார் நயமாக .
இன்னும் எத்தனயோ இருக்கிறது எடுத்துச் சொல்ல. அத்தனையையும் நானே சொல்லி முடித்து விட்டால் உங்களுக்கு வேலையில்லாமல் போய் விடுமே ஆகையால் நான் விடை பெறுகிறேன். அத்தனையும் வைரக்கல் பதித்த அணிகலனே அணிந்து பாருங்கள் அமைதியாய்.
வாழ்க வளமுடன் ....!
 
இப்படிக்கு
இனியா(இந்திரா - அருள்)


மனம் நிறைந்த நன்றியுடன்..

கீதா

10 comments :

  1. வணக்கம்

    புத்தகத்துக்கான அணிந்துரை மிக அருமையாக உள்ளது
    அணிந்துரை வடித்த இனியா அம்மாவுக்கு எனது பாராட்டுக்கள்
    தங்களின் முயற்சிவெற்றியடைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கேட்டவுடன் தயங்காமல் எழுதி கொடுத்தார்கள்..மிக்க நன்றி சகோ..நாளை சந்திப்போம்.

      Delete
  2. சகோதரி இனியாவின் அணிந்துரை
    நூலைப் படித்திடத் தூண்டுகிறது
    இன்னும் இரண்டு நாட்கள்தானே இடையில் இருக்கின்றன
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete
  4. கவிஞர்க்கு
    தங்கள் கவிதை நூலும் அதற்குச் சகோதரி இனியா அவர்கள் எழுதிய அணிந்துரையும் அருமை!
    வரிக்கு வரி உங்கள் கவிதைகளின் நாடி பிடித்துப்பார்த்து இனியா அவர்கள் நுட்பங்களை விளக்கிச் செல்லும் விதம்
    யாருக்குமே தங்கள் நூலை ஒரு முறை படித்திடத் தோன்றும் வண்ணம் அமைந்துள்ளது.
    இதயபூர்வமான வாழ்த்துகள்!!
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையான அணிந்துரை..அளித்துள்ளார் தோழி இனியா..மிக்க நன்றி..

      Delete
  5. நன்றி பாராட்டி எழுதிய பதிவு கண்டு நெகிழ்ந்து போனேன்மா மிக்க நன்றிடா அனைத்தும் சிறப்பாக நிறைவேற என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி தோழி..

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...